×

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2020ம் ஆண்டுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டெல்லி : இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2020ம் ஆண்டுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக விளையாடி வரும் லியாண்டர் பயஸ், இந்தியா சார்பில் ஒலிம்பிக்-கில் பதக்கம் வென்ற ஒரே டென்னிஸ் வீர‌ர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.1991ம் ஆண்டு முதல் இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த பயஸ், 2020ம் ஆண்டில் தனது 30வது வருடத்தில் காலெடுத்து வைக்கிறார்.

இவர் இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், 10 முறை மற்ற தொடர்களில் இரட்டையர் பிரிவு பதக்கங்களையும் வென்றவர். இதுதவிர 66 முறை கோப்பைகளையும், 1996ம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர்.30 ஆண்டுகளாக சர்வதேச அளவில் விளையாடி வரும் லியாண்டர் பயஸ், கடந்த 2 ஆண்டுகளாக தடுமாற்றத்தை சந்தித்துள்ளார். தற்போது 46 வயதாகும் இவர், எதிர்வரும் 2020ம் ஆண்டில் சில போட்டிகளில் மட்டும் பங்கேற்று சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் இதுவரை தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக லியாண்டர் பயஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பயஸ், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைத்திடும். அத்துடன், 2020ம் ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் எனது இறுதி ஆண்டு என்பதையும் அறிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டில் நான் சில குறிப்பிட்ட தொடர்களில் மட்டுமே விளையாடவுள்ளேன். அதுவும் எனது அணியுடன் பயணிக்கவும், எனது நண்பர்களை சந்திக்கவும், எனது ரசிகர்களுடன் கொண்டாடுவதற்காக விளையாடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Leander Paes ,retirement ,Indian , Tennis Player, Leander Paes, Leisure, International, Olympic, Grand Slam
× RELATED தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்...